விளையாட்டு

இந்திய அணியுடனும் தோற்று, 9 ஆவது ரி20 உலகக்கிண்ணத்துக்கு விடை கொடுத்தது இலங்கை

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் சுற்றில் தான் சந்தித்த 3ஆவது லீக் ஆட்டத்தில் 82 ஓட்டங்களால் தோற்றுப் போன இலங்கை மகளிர் அணி தொடரான 3ஆவது தோல்வியுடன் 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது.

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் குழு ஏ இல் இடம்பெற்றுள்ள இலங்கை மகளிர் அணி முதல் இரு லீக் ஆட்டங்களிலும் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளிடம் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் வென்றாக வேண்டிய நிர்ப்பந்த்துடன் நேற்று (09) பலமிக்க இந்திய மகளிர் அணியை சந்தித்திருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதற்கமைய அவ்வணியின் ஆரம்ப வீரர்களான ஸ்மிரிட்டி மந்தணா மற்றும் சபாலி வர்மா ஜோடி 98 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று அணிக்கு வலுச்சேர்த்தது. இதில் மந்தணா 50 மற்றும் சபாலி 43 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணித்தலைவி ஹர்மன்பிரிட் கவுர் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அமா மற்றும் சமரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

அடுத்து இந்திய மகளிர் அணி நிர்ணயித்த மிகக் கடினமான 173 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இலங்கை மகளிர் அணிக்கு முன்னனி துடுப்பாட்ட வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் கொடுக்க இலங்கை அணியால் 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற முடித்தது. துடுப்பாட்டத்தில் கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷ் சோப்பனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் இலங்கை மகளிர் அணி 82 ஓட்டங்களால் மிகப் பெரிய தோல்விக்கு முகம் கொடுத்ததுடன் இவ் 9 ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரில் தொடரான 3ஆவது தோல்வியை பதிவு செய்தி குழு ஏ இல் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் முதல் சுற்றின் 4ஆவதும் இறுதியுமான போட்டி நியூஸிலாந்து அணியுடன் இருக்கும் நிலையில் இலங்கை மகளிர் அணி ஆறுதல் வெற்றியுடனாவது தாயகம் திரும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *