தேர்தல் பேரணிகளை 15 இல் நடத்த வேண்டாம்..! -பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள்
“எதிர்வரும் 15 ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்” என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ளது.
“அதனால், குறித்த பரீட்சை நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்” எனவும், “ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும்”, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
