உள்நாடு

தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரித்தல் பற்றிய பொது மக்களுக்கான விழிப்புணர்வு

எதிர்வரப்போகின்ற அனைத்து வகையான தேர்தல்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பொதுமக்களின் வேணவாக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கும் விழிப்புணர்வு செயலமர்வுகள் காலத்தின் அவசியத் தேவை கருதி நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்மத் தெரிவித்தார்.

இத்தகைய தேர்தல் விஞ்ஞாபனத்தை விருத்தி செய்தல் தொடர்பான சிவில் சமூக வழிகாட்டு ஆலோசனைகளும் இலகுபடுத்தல் செயற்பாடுகளும் உள்ளடங்கிய தெளிவூட்டல் நிகழ்வொன்று (06.07.2014) மட்டக்களப்பு மன்றேசா பயிற்சிச் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் வளவாளர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷெரீன் ஷரூர் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வில் தெளிவூட்டல்களை வழங்கினர்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடுடையோர், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலர்கள், இளைஞர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்த விழிப்புணர்வு செயலமர்வில் பங்கேற்றனர்.

எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள உள்ளுராட்சி, மாகாண, பொதுமற்றும் ஜனாதிபதித் தேர்தல் வரையில் வேட்பாளர்கள் எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், மக்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி அவற்றைச் செயலுருப்பெறச் செய்ய வேண்டும், குறிப்பாக சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எவ்வாறான விடயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் இவற்றை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுள் உள்வாங்கும் வகையில் சமூகத்தை எவ்வாறு தூண்ட வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு குழுக் கலந்துரையாடல்கள் மூலம் கருத்துக்கள் பெறப்பட்டன.

 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *