”எனது அரசியல் பயணத்தை தீர்மானிக்க இஷாம் மரிக்காருக்கு உரிமை கிடையாது” ; முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர்
எனது அரசியல் பயணத்தை தீர்மானிக்க இஷாம் மரிக்காருக்கு உரிமை கிடையாது என வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.
“மயில் கட்சியில் இருந்து அவசரமாக தாஹிர் வெளியேற வேண்டும்…!” என்ற கோரிக்கையை தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் முன்வைத்துள்ளமை பற்றி தமிழ் இணையம் ஒன்று அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “சகோதரர் இஷாம் மரிக்காருக்கும் , எனக்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் கிடையாது. அவருடைய தனிப்பட்ட கருத்தையே அவர் சொல்லியிருக்கிறார். இந்த நாட்டில் யாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கின்றது அல்லவா. அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
நான் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்தக் கட்சியில் பயணிக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதனை முடிவெடுக்கும் உரிமை மக்களைத் தவிர, வேறு யாருக்கும் கிடையாது. எந்தவிதமான எதிர்பார்ப்புக்களையும் இன்றி, என்னை நம்பியிருக்கும் மக்களின் நலனுக்காகவே நான் அரசியலில் பயணிக்கின்றேன்.
புத்தளம் மாவட்ட அரசியல் தொடர்பில் நன்கு ஆராய்ந்து, முறையான ஆலோசனைகளை பெற்று நான் பயணிக்கும் மக்கள் காங்கிரஸ் ஊடாக புத்தளம் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கமாகும்.” என்றார்.
(சாஹிப் – புத்தளம்)
