ஓட்டமாவடி – வாழைச்சேனை பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம்
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் இன்று (31) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடாத்தப்பட்டு வரும் வாராந்த சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் குத்தகையின் கீழ் மீராவோடை பகுதியில் புதன்கிழமைகளில் இயங்கி வந்த வாராந்த சந்தை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் குத்தகையின் கீழ் செம்மண்ணோடை பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாராந்த சந்தை ஆகிய இரு சந்தைகளையும் பிரதி சனிக்கிழமைகளில் மாத்திரமே நடாத்துமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை இணக்கப்பாட்டுக்கு அமைய சனிக்கிழமைகளில் நடாத்தப்பட்டு வரும் நிலையில், வாழைச்சேனை பிரதேச சபை பிரிவிலுள்ள செம்மண்ணோடை வாராந்த சந்தை இணக்கப்பாட்டை மீறி செவ்வாய்க்கிழமைகளில் நடாத்தப்பட்டு வருவதால் இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இரு பிரதேச சபைகள் மற்றும் பொது நிறுவனங்கள் எடுத்த தீர்மானங்களை வாழைச்சேனை பிரதேச சபை மீறிச் செயற்படுவதாக ஓட்டமாவடி – வாழைச்சேனை ஆகிய ஒன்றிணைந்த வர்த்தக சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் சனிக்கிழமை தினத்தில் செம்மண்ணோடை வாராந்த சந்தையும் இயங்க வேண்டும் என இரு வர்த்தக சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.



(எச்.எம்.எம்.பர்ஸான்- ஓட்டமாவடி நிருபர்)
