அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவு
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்” என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார்.
இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரரை கைது செய்யுமாறு கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கு தொடுநர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டார்.
