ஜீவனின் திருமணத்தில் பங்கேற்க ரணில் தமிழ் நாடு பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (21) இந்தியா செல்கின்றார். இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்கின்றார்.
இதன் காரணமாக இன்று கூட்டு எதிர்க்கட்சிகளால் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் பேரணி வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது ஆசிகளையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் திருமணத்தில் மேலும் பல முக்கிய இலங்கை அரசியல் பிரமுகர்களுடன், இந்திய அரசியல் முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய இரகசிய சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
