பருவநிலை மாற்றம் காரணமாக, நாகை – காங்கேசத்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பா் மாதம் நிறுத்தப்படும்
பருவநிலை மாற்றம் காரணமாக, நாகை – காங்கேசத்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பா் மாதம் நிறுத்தப்படும். மேலும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தர்ராஜன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது.
இந்த கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனா். நாளுக்குநாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் நவம்பா் மாதம் இறுதிக்குள் நாகை வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படும். இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது. ஆகவே நவம்பா் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது.
கடந்த 30 ஆண்டுகளின் காலநிலை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நிகழாண்டு நவம்பா் மாதத்தை தவிா்த்து, டிசம்பா், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
