Tuesday, August 12, 2025
Latest:
உலகம்

ராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நிதியொதுக்குமாறு தமிழக அமைச்சர் வேலு மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் வலியுறுத்து..!

ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு, சாகர்மாலா திட்டத்தின்கீழ், ரூ.118 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச படகு சேவையையும் ஊக்குவிக்கும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திங்கள்கிழமை புதுதில்லி டிரான்ஸ்போர்ட் பவனில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பனாந்தா சோனவாலை சந்தித்து எடுத்து கூறினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு 11.8.2025 திங்கள்கிழமை புதுதில்லி டிரான்ஸ்போர்ட் பவனில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பனாந்தா சோனவாலை சந்தித்து, சாகர்மாலா திட்டத்தின்கீழ் திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், நிதி வழங்கவும் வலியுறுத்தினார்.

ராமேஸ்வரம் (இந்தியா) மற்றும் தலைமன்னார் (இலங்கை) இடையே சர்வதேச பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின்கீழ், தமிழ்நாடு துறைகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்வது குறித்து கோரினார்.

ராமேஸ்வரம் ஒரு புனித யாத்திரைத் தலமாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி பக்தர்கள் / சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இத்துறைமுகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச படகு சேவையையும் ஊக்குவிக்கும் என்று அமைச்சர், மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறினார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் ரூ.118 கோடி திட்ட செலவில், 250 மீட்டர் நீளமுள்ள அணுகு தோணித்துறை, சர்வதேச பயணிகள் முனையம் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) உள்ள துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் (NTCPWC) தயாரித்துள்ளது. இதன் மூலம் ராமேஸ்வரம் (இந்தியா) முதல் தலைமன்னார் (இலங்கை) இடையிலான 26 கடல் மைல் (48 கிலோமீட்டர்) துாரத்திற்கு சர்வதேச பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியும் என்று தெரிவித்தார்.

தோணித்துறை மற்றும் பயணிகள் முனையம் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இலங்கையின் தலைமன்னார் வரை பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார். ராமேஸ்வரம் (இந்தியா) மற்றும் தலைமன்னார் (இலங்கை) இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு, சாகர்மாலா திட்டத்தின்கீழ், ரூ.118 கோடி நிதி கோரி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவியினை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டுமென்று, அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பாக் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் பாம்பன் கால்வாய் மீன்பிடி கப்பல்கள் போன்ற சிறிய கப்பல்கள் கடல் வழியாக வர்த்தகம் செய்ய உதவுகிறது. இது இந்தியாவின் கிழக்கு-மேற்குப் பகுதிகளை கடல் வழியாக இணைக்கிறது. இக்கால்வாயில் தற்போதுள்ள ஆழம் 2.0 மீட்டர் மட்டுமே. 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஷெர்சர் திறப்பினை கொண்ட பழைய ரெயில் பாலம், ஒரு புதிய ரெயில் பாதையுடன் தூக்குப் பாலமாக மாற்றப்பட்டு, பிரதம மந்திரியால் 6.4.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்திற்கு சிறிய நடுத்தர அளவிலான கப்பல்களுக்கு கடல் வழியாக கிழக்கு-மேற்கு இணைப்பை வழங்குவதுடன் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பாதுகாப்பு கப்பல்கள், இந்தியாவின் நீர்ப்பகுதிக்குள்ளாகவே பயணிக்க வழிவகுக்கும். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம், பாம்பன் கால்வாயை துார்வாருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது.

சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம்(IIT) (துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம்) விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தவுடன், இந்தியாவின் தெற்குப் பகுதியில் கடல் வழியாக கிழக்கு-மேற்கு இணைப்பை உறுதி செய்வதற்கு சாகர்மாலா திட்டத்தின்கீழ், 100% மானியமாக இத்திட்டத்திற்கான நிதி உதவியினை வேண்டுமென்று, மத்திய அரசு வழங்க அமைச்சர் வலியுறுத்தினார்கள்.

மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதுடன், பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், இம்மாவட்டத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும்பங்காற்றும் என்றும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்கள்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைச் செயலாளர் ராமச்சந்திரனையும், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி விஜயன், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர் / துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தி.ந.வெங்கடேஷ், தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார், மற்றும் நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் ரா.சந்திரசேகரும் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *