உள்நாடு

டிஜிட்டல் மயமாக்கலை இலக்காகக் கொண்ட தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட “தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு – 2025”, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (04) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சும் “Clean Sri Lanka” திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நாடு தழுவிய கணக்கெடுப்பு, ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வைக் குறிக்கும் வகையில், அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் மீன்பிடிப் படகுகளில் கணக்கெடுப்புக்கான ஸ்டிக்கர்களை ஒட்டியும், டெப் கணினிகள் (Tab Computers) மூலம் தரவு முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்தும் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். பின்னர், பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீனவ சமூகத்துடன் அவர்கள் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கூறியதாவது:
“கடந்த 10 வருடங்களாக இத்தகைய கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாததால், நாட்டில் உள்ள உண்மையான மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் மற்றும் கொள்ளளவு குறித்து சரியான தரவுகள் இருக்கவில்லை. இந்த நிலைமை, மீன்பிடித்துறையை நவீனமயப்படுத்துவதற்கும், மீனவ சமூகத்திற்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் பெரும் தடையாக இருந்தது. இன்று நாம் ஆரம்பித்திருப்பது, முழுமையாக தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். எமது நோக்கம், நமது நாட்டின் மீன்பிடித்துறையை, பாரம்பரியமாக மீன்பிடிப்பவர்கள் என்ற நிலையிலிருந்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, நாட்டின் பொருளாதாரத்திற்கு டொலர்களை ஈட்டித்தரும், தரமான புரதத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நவீன தொழில்துறையாக மாற்றுவதே ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் மூலம், பழுதடைந்த மற்றும் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட படகுகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் நமது கடல் வளத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கிறோம். இந்த தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து மீனவ மக்களிடமும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள்:
“எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சரியான தரவுகள் இன்றியமையாதவை. எங்கள் அமைச்சில் இருந்த தரவுகள் பிழையானவை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதனால்தான், இந்தக் கணக்கெடுப்பின் மூலம் ஒரு துல்லியமான தரவுத்தளத்தை (Database) உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். இந்த கணக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெறுகிறது. முதலில், வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளும், இரண்டாவதாக பல நாள் படகுகளும், மூன்றாவதாக பாரம்பரிய மற்றும் நன்னீர் மீன்பிடி படகுகளும் கணக்கெடுக்கப்படும். ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கோரிக்கையான, கடற்கரையில் கைவிடப்பட்ட ஃபைபர்கிளாஸ் படகுகளின் எண்ணிக்கையை அடையாளம் கண்டு, அவற்றை ‘சினோர்’ (Cey-Nor) நிறுவனம் மூலம் மறுசுழற்சி செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகும். மேலும், மீனவ சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையான காப்புறுதித் திட்டம் இல்லாமையை நிவர்த்தி செய்யும் வகையில், ‘சயுர’ என்ற பெயரில் புதிய காப்புறுதித் திட்டம் இம்மாதம் 14 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும். விபத்தில் உயிரிழக்கும் மீனவருக்கான நட்டஈடு 2 இலட்சத்திலிருந்து 10 இலட்சமாக (ஒரு மில்லியன்) எமது அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் மூலமும், சர்வதேசத்துடன் கையாளக்கூடிய, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட, ஒரு நிலைபேறான மீன்பிடித்துறையை உருவாக்குவதே எமது இலக்காகும்.”

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களும், அமைச்சின் புதிய நிகழ்நிலை (online) தரவு முறைமையில் உள்ளடக்கப்படும் என்பதோடு, 2026 ஆம் ஆண்டு முதல், உரிமப்பத்திரம் வழங்குதல், மானியங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இந்தக் கணக்கெடுப்பில் உட்படுத்தப்பட்ட படகுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள்:
நிஷாந்த பெர்னாண்டோ அவர்கள் – மொரட்டுவ மாநகர முதல்வர்
திரு. பி.ஏ.பி. கபில பமுணுஆராய்ச்சி அவர்கள் – தலைவர், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம்
திரு. சுசந்த கஹவத்த அவர்கள் – பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம்
திரு. தசுன் விஜேசேகர அவர்கள் – பணிப்பாளர் (ஒருங்கிணைப்பு), Clean Sri Lanka செயலகம்
திரு. எஸ்.பி. பிரேமவர்தன உதவிப் பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *