தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக வெளியேற எட்டப்பட வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து நவாஸ் கனி வலியுறுத்து
இலங்கை கடற்படையினரால் 29-07-2025 அன்று ஒரே நாளில் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்திம், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், இதுவரை கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி 29.07.2025செவ்வாய்க்கிழமை மாலை
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அலுவகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவில் கூறியதாவது : இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.
பலமுறை நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை குறித்து வலியுறுத்தி விட்டேன், பலமுறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி விட்டேன்,
ஆனால் இந்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து எங்களுடைய மீனவ சொந்தங்கள் கைது செய்யப்படும், படகுகள் சிறைபிடிக்கப்பட்டும், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர். தற்போது 29-07-2025 அன்று மட்டும் 14 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
தற்போது 56 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் இந்திய அரசு நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)