உள்நாடு

கொழும்பு மேயர் தெரிவில் முறைகேடு; இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை தவறு என்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை
சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புகளை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கொழும்பு மாநகர சபை மேயர், பிரதி மேயர் ஆகிய நியமனங்கள் தொடர்பில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆளும் தரப்பினர் தமக்கு ஏற்றால் போல் சட்ட ஏற்பாடுகளை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை கட்டளை வாக்கெடுப்பு சட்டத்தின் 66 (ஈ) பிரிவில், பொதுக் கொள்கை அடிப்படையின்படி பகிரங்க வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சட்டத்தின் 8 ஆம் பிரிவில் 66 (ஈ) 6 உப பிரிவில் இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது அவசியமற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நோக்கும்போது பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது குறித்து சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே நாட்டு மக்களையும் சபையையும் தவறாக வழிநடத்துவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

(அஷ்ரப் ஏ சமட்)

நீதிமன்றத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியும்- என்று நிசாம் காரியப்பர் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *