கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர், உப தவிசாளர் பதவியேற்பு
கற்பிட்டி பிரதேச சபையின் 07 வது தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் ஏ.எஸ்.எம் றிகாஸ் மற்றும் உப தவிசாளராக எச் எம் சமன் குமார ஹேரத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை (19) காலை பதவியேற்றனர்.
கடந்த திங்கட்கிழமை (16) வடமேல் மாகாண ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பாக இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் ஏ.எஸ்.எம் றிகாஸ் 16 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையாக வெற்றி பெற்று கற்பிட்டி பிரதேச சபையின் 07 வது தவிசாளராகவும் அதே கட்சியைச் சேர்ந்த எச்.எம் சமன் குமார ஹேரத் 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
கற்பிட்டி பிரதேச சபைக்கு இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பாக 10 பேரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 10 பேரும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக 03 பேரும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 02 பேரும், பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக 02 பேரும், சர்வஜன அதிகாரம் சார்பாக 02 பேரும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 01 வரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக 01 வரும், சுயேட்சை குழு சார்பாக 01 வரும் என 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)