உள்நாடு

இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தினால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவசர விவாதத்தை நடத்துங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை

இஸ்ரேல்-ஈரான் யுத்தம் காரணமாக கடும் நெருக்கடி நிலைசார் பிரச்சினை எழுந்துள்ளது. நமது நாட்டைச் சேர்ந்த 10,000 முதல் 20,000 பேர் அளவிலானோர் இஸ்ரேலில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் உயிர் பாதுகாப்பு விடயத்திலும் பிரச்சினை எழுந்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் முக்கிய இடத்தை வகின்றது. இந்த யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிகள் முகம் கொடுக்க நேரிடும் கடுமையான பாதுப்புகள் குறித்து பேசி கலந்துரையாட வேண்டும். இந்த யுத்தம் எரிபொருள் விலைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி திறன், தொழில்துறைக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முறையான விவாதத்திற்கு நாம் பிரவேசிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் காணப்படும் ஏற்பாடுகளுக்கு அமைய, இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தினால் நமது நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் குறித்து விவாதமொன்றை நடத்தக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த பிரேரணையினை முன்வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த பிரேரணைக்கு 20 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இணக்கத்தை தெரிவித்தனர்.

வரையறுக்கப்பட்ட அணு ஆயுத யுத்தமொன்றின் பாதிப்பையும் சந்திக்க வேண்டிவருமான சூழலும் உருவாகி வருகிறது. இதனால் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையையும் எழுப்பியுள்ளதால், இன்றோ அல்லது நாளையோ அவசர நிலைமைகளின் அடிப்படையில் விவாதத்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைத்து, இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் தலையீட்டையும் முன்வையுங்கள். இதுவரை எந்த முறையான பதிலும் முன்வைக்கப்படவில்லை. தனிப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும் கருத்துக்களால் நாம் திருப்தி அடைய முடியாது. இந்த விவகாரம் குறித்து விரைந்த தீர்மானமொன்றை சபாநாயகரிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *