இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் துடுப்பெடுத்தாடுகிறது வங்கதேசம்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பிக்கிறது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
இன்று (17) காலை 10.00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும், இந்தப் போட்டிக்காக பெயரிடப்பட்ட இலங்கை அணியில் சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, பசிந்து சூரியபண்டார மற்றும் இசிதா விஜேசுந்தர போன்ற புதுமுக வீரர்கள் உள்ளனர்.
2025 – 2027 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்நிலையில், இரு அணிகளின் தலைவர்களும் நேற்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு தனது அணியின் வீரர்கள் காலி மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு வெற்றிகரமான பிரியாவிடையை வழங்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.