உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்குமிடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் நேற்று (16.06.2025) சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் செய்யும் போது நிருவாக சேவையின் சிரேஷ்ட தன்மையை முன்னுரிமைப்படுத்தி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

நீண்டகாலமாக கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக கோரிக்கை விடுத்தும் இதுவரையும் நிறைவேற்றப்படவில்லை.

மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பதவிப் பெயர் , வேறு மத்திய அரசின் தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பதவிப் பெயர்கள் வேறாக அமைந்துள்ளது. மாகாண பாடசாலைகளில் கடமை புரியும் கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பெயரும், மத்திய அரசின் தேசியப் பாடசாலைகளில் கடமை புரியும் கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பதவிப் பெயர்களும் ஒரே பெயராக குறிப்பிடப்பட வேண்டும்.

மாகாணப் பாடசாலையில் தற்பொழுது ஆய்வுகூட பணியாளர் மற்றும் நூலகப் பணியாளர்களாக கடமை புரியும் தரம் 01 ல் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு MN-தரத்திற்கு மாற்றப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்திலும் கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்குப் பின் கிழக்கு மாகாண சபையினுள் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சை இதுவரையும் நடைபெறவில்லை. இப் பரீட்சையை நடாத்துவதற்கான பணிப்புரையை கௌரவ ஆளுநர் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குள் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி, திராய்க்கேணி ஆகிய பிரதேசங்கள் அமைந்துள்ளன. இப் பிரதேசங்களுக்கான பிரதான திட்டம் (MASTER PLAN) ஒன்றை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இக் கோரிக்கைகள் தொடர்பாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனங்கள் செய்யும் போது நிருவாக சேவையின் சிரேஷ்ட தன்மையை கருத்திற் கொண்டு நியமனங்கள் வழங்கப்படும் எனவும் கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விஷேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அமைந்துள்ள பிரதேசங்களின் பெருந்திட்டம் (MASTER PLAN) ஒன்றை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டார்.

(கே. எ. ஹமீட் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *