கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளரானார் ரிகாஸ்; முதல் முறையாக சபையை தனதாக்கியது தேசிய மக்கள் சக்தி
கல்பிட்டி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முஹம்மது ரிகாஸ் தெரிவாகினதுடன், கல்பிட்டி பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி முதல் முறையாக தனதாக்கியது.
கடந்த மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சித்தேர்தலில் 32 உறுப்பினர்களை கொண்ட கல்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், சிறீ லங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும், சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், பொதுஜன முன்னனி 2 ஆசனங்களையும், சர்வஜன அதிகாரம் 2 ஆசனங்களையும், நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னனி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா 1 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
இதற்கமைய பலமிக்க போட்டியை கொண்ட இச் சபையை யார் ஆட்சியமைக்கப் போவது என்ற நிலை காணப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிசாளர் தெரிவு இன்று (16) காலை 10 மணிக்கு வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.என்.எம். சஞ்சீவனி ஹேரத் தலைமையில் ஆரம்பித்திருந்தது.
இதில் முதலில் உரையாற்றிய வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முதலில் சகல உறுப்பினர்களையும் வரவேற்றுக் கொண்டார். பின்னர் எவ்வாறாக தவிசாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முறையினை விளக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் திறந்த முறையில் தவிசாளருக்கான வாக்கெடுப்பைக் கோரினர். மாறாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை கோரினர்.
இதனால் திறந்த வாக்கெடுப்பா அல
அல்லது ரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க பிரிதொரு வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது திறந்த வாக்கெடுப்பு வேண்டும் என 15 உறுப்பினர்களும், ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என 16 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு உறுப்பினர் சபை அமர்வில் பங்கேற்றிருக்கவில்லை. வாக்களிப்பில் பிரகாரம் தவிசாளரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து முஹம்மது ஆஷிக்கை நுவன் ஷாமர பிரேகரிக்க , ஸ்டென்லி ஆமோதித்தார்.
பின்னர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து அப்துல் சத்தார் முஹம்மது ரிகாஸை சஞ்சீவ பிரேகரிக்க, அதனை சமன் குமார ஹேரத் ஆமோதித்தார். பின்னர் இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் முகம்மது ரிகாஸ் 16 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தியின் முகம்மது ஆஷிக் 15 வாக்குகளையும் பெற்றுக் கொள்ள கல்பிட்டி பிரதேச சபையை முதல் முறையாக ஆளும் தேசிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியதுடன் முஜம்மது ரிகாஸ் தவிசாளராக தேர்வானார்.
பின்னர் இடம்பெற்ற பிரதித் தவிசாளருக்கான வாக்கெடுப்பின் போது சமூகமளிக்கத் தவறிய பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பங்கேற்றிருக்க பிரதித் தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஹேரத் முதியன்சலாஹே சமன் குமார ஹேரத்தும், முஹம்மது ஹாரூனும் போட்டியிட்டனர். ரகசிய வாக்கெடுப்பு முடிவில் 17 வாக்குகளை தேசிய மக்கள் சக்தியின் ஹேரத் முதியன்சலாஹே சமன் குமார ஹேரத் பெற்றுக் கொள்ள முஹம்மது ஹாரூன் 15 வாக்குகளை பெற்றார். இதனடிப்படையில் கல்பிட்டி பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளராக ஹேரத் முதியன்சலாஹே சமன் குமார ஹேரத் தெரிவானார்.



(அரபாத் பஹர்தீன், சிராஜ் )