கொழும்பு மா நகர மேயர் தெரிவில் ஆணையாளர் ஒருதலைப்பட்சம்; ஐ.ம.சக்தி சட்ட நடவடிக்கை
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், உள்ளூராட்சி சபை ஆணையாளர் திருமதி சரங்கிகா ஜயசுந்தர, பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு மாறாக செயற்பட்டதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்த முடிவு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், இன்று மாலை மாநகரசபை மேயர் தெரிவுக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வில், மேயர் மற்றும் பிற பதவிகளுக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் இரகசிய வாக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இருந்தபோதிலும் உள்ளூராட்சி சபை ஆணையாளர் திருமதி சாரங்கிகா ஜயசுந்தர இரகசிய வாக்கெடுப்பு (Secret Ballot) முறையைப் பயன்படுத்த ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார்.
இது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமாக அமைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கருதுகிறது. இதனால், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டுதல்களை மீறியதாக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.