ஈரான் இஸ்ரேலின் பல நகரங்கள் மீது தாக்குதல்;பலர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் காயம், இரு இலங்கைப் பெண்களும் படுகாயம்
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து இரவு முழுவதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் கடும் சேதம் ஏற்பட்டிருந்ததுடன், பலர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான பொது மக்கள் படுகாயமடைந்திருந்தனர்.
அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட பலத்த தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவின் தெற்கே உள்ள ஒரு வீட்டில் பணியாற்றிய இலங்கை பெண் அந்த வீட்டின் குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோல் பேட் யாமில் உள்ள மற்றொரு பெண் அதிகாலை 4 மணியளவில் தாக்குதலில் லேசான காயமடைந்துள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்நாட்டு உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல் அவிவிற்கு தெற்கே உள்ள பேட் யாமில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஈரானிய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே, நாட்டின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (எம்டிஏ) தெரிவித்துள்ளது.
அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று எம்டிஏ செய்தித் தொடர்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, “நாங்கள் 24 மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் உள்ள எந்தவொரு இலங்கை நாட்டவரும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.