உள்நாடு

புதனன்று ஜேர்மனிக்கு பயணிக்கும் ஜனாதிபதி அனுர..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இந்த விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் உட்பட அந்நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் மற்றும் ஜேர்மன் வாழ் இலங்கை சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன், வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான உத்தியோகப்பூர்வ அழைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.

ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தூதுவர் பெலிக்ஸ் நியூமன் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் இருதரப்பு பரஸ்பர நலன்களில் ஒத்துழைப்பைத் தொடர ஜெர்மனியின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். மனிதவள மேம்பாட்டில் ஜேர்மனியின் 70 ஆண்டுகால அனுபவத்தை இலங்கைக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டது.

அத்துடன் சுற்றுலா உட்பட ஜேர்மனியுடன் மேலும் வர்த்தக உறவுகளை ஆராய்ந்து ஜேர்மன் தொழிலாளர் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு இந்த விஜயம் வாய்ப்பாக அமையும் என இருதரப்பு நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை ஜனாதிபதி அநுரவின் ஜேர்மன் விஜயத்தின் போது புதுப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இலங்கையின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஜெர்மனியின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர் பெலிக்ஸ் நியூமன் உறுதி செய்துள்ளார்.

எவ்வாறாயினும்  பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித உரிமைகளன் பாதுகாப்பு உட்பட பொறுப்புக்கூறல் விடயங்களில் ஜேர்மனியும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற நிலையில்  ஜனாதிபதி அநுரவின் ஜேர்மனி விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *