உலகம்

சவூதி அரபியா மற்றும் சுற்றுச்சூழல்: நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு உலகளாவிய சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில், சுற்றுச்சூழல் நீதியின் கொள்கைகள் மற்றும் சவூதி விஷன் 2030 இன் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு லட்சிய தேசிய தொலைநோக்கு கட்டமைப்பிற்குள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் சவூதி அரேபியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சார்ந்த தீவிர சவால்களையும், அவற்றை தீர்க்க வேண்டும் என்பதற்கான அவசியத்தையும் கண்டறிந்து, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நிலைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு முடிவுகாண, சவூதி அரேபியா, சுற்றுச்சூழல்பாதுகாப்பை முழுமையான அபிவிருத்தி மாற்றத்தின் மையமாகக் கொண்டு, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றம் மற்றும் வறண்ட நிலமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கும், மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், “சவூதி பசுமை முனைவு” (Saudi Green Initiative)” ஒரு முன்னேற்றமான மாதிரியை வெளிப்படுத்துகிறது. இது, நாட்டிற்குள் பத்து பில்லியன் மரங்களை நட்டல், பசுமை பரப்புகளை அதிகரித்தல், மற்றும் வருடத்திற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 278 மில்லியன் டன் கார்பன் வாயு வெளியீட்டை குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த முயற்சி, “மத்திய கிழக்கு பசுமை முனைவு” உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து, மத்திய கிழக்கு பகுதி முழுவதிலும் 50 பில்லியன் மரங்களை நட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் பரப்பு மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடுப்படையில் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த முயற்சிகள், சுற்றுச்சுழற்சி கார்பன் பொருளாதார அணுகுமுறையின் கீழ், 2060 ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு ஊடுருவும் கார்பன் வெளியீடுகளை பூச்சியத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற சவூதி அரபிய அரசின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகக் கூடியதாக அமைகின்றன. இந்த அணுகுமுறை, 2020 ஆம் ஆண்டு சவூதி அரபியா G20 யின் தலைமை பொறுப்பேற்ற போது அந்நாட்டின் வழிகாட்டுதலின்படி ஆதரிக்கப்பட்டது. இதில், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் (mitigation), மீள் பயன்படுத்தும் (reuse), மீள்சுழற்சி செய்யும் (recycling), மற்றும் அகற்றும் (removal) தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சகாகா சூரிய ஒளி மின்சக்தி திட்டம் (Sakaka Solar Energy Project), துமத் அல்-ஜண்டல் காற்றழுத்த மின்சக்தி திட்டம் (Dumat Al-Jandal Wind Energy Project), மற்றும் எதிர்கால சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரத் திட்டங்களான NEOM மற்றும் The Line போன்றவற்றைத் தொடங்குவது போன்ற பல மூலோபாயத் திட்டங்களை இராச்சியம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவை சுத்தமான எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான நகரங்களுக்கான உலகளாவிய மாதிரியைப் பிரதிபலிக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்குள், மின்னுற்பத்தியின் 50% ஐ புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களிலிருந்து பெறும் இலக்கை நோக்கி சவூதி அரபியா முன்னேரிச் செல்லுகிறது. இது, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார துறைகளில் முழுமையான மாற்றத்தை அடைவதற்கான சவூதியின் முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் தலா எரிசக்தி பயன்பாட்டை 7% ஆக குறைக்கும் வகையில் உதவியுள்ளன. மேலும், பல்வேறு துறைகளில் தண்ணீர் மற்றும் எரிசக்தி பயன்பாட்டு திறனையும் மேம்படுத்தியுள்ளன, இது சவூதியின் சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து செல்லும் வளர்ச்சியின் நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

இந்த சுற்றுச் சூழல் சார் முயன்சிகளின் இன்னொரு ஆரம்ப கட்டமாக சவூதி அரபியா சுற்றுச்சூழல் துறையை மறுசீரமைத்து பல முக்கிய நிறுவனங்களை நிறுவியுள்ளது. இதில் முக்கியமானவையாக தேசிய சுற்றுச்சூழல் இணக்கமான பணிநிலை மையம், தேசிய செடிகள் வளர்ச்சி மையம், மற்றும் தேசிய வானிலை மையம் போன்றன அடங்குகின்றன.

மேலும், சுற்றுச்சூழல் முறைமைகளை மேம்படுத்தும் தேசிய யோசனை (National Environmental Strategy) க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, உயிரினங்கள் வாழும் பருவ அமைப்புகளை பாதுகாப்பது, காற்றின் தரத்தை மேம்படுத்துவது, குப்பை மேலாண்மை திறனை உயர்த்துவது, மற்றும் சுற்றுச்சூழல்காக்கப்பட்ட பகுதிகளின் விகிதத்தை அரசின் மொத்த பரப்பளவில் 30%ஐக் கடந்த அளவிற்கு உயர்த்துவது அடங்குகின்றன. ரியாத் போன்ற முக்கிய நகரங்களில், நகராட்சி குப்பை மறுசுழற்சி விகிதம் 35% ஐ விட உயர்ந்துள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டிலிருந்து, சுமார் 2,00,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரபியாவின் முயற்சிகள் தேசிய மட்டத்தில் மட்டும் இல்லாமல், சர்வதேச அளவில் மற்றும் நட்பு நாடுகளுக்கும், குறிப்பாக ஆபிரிக்க மற்றும் ஆசிய பகுதிகளில் இருக்கும் நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளன. இம்முயற்சிகள் வழியாக: வறண்ட நிலமாக்கலை எதிர்க்கும் திட்டங்களுக்கு நிதி உதவி, தண்ணீர் மேலாண்மை திறன்களை மேம்படுத்தும் பயிற்சி மற்றும் வசதிகள் உருவாக்கல், சுற்றுச்சூழல் சார் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப உதவித்தொகைகள் வழங்கல் மற்றும் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund) மற்றும் உலக சுற்றுச்சூழல் வசதியின் (Global Environment Facility) வாயிலாக காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சவூதி அரபியா பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சார் சர்வதேச ஒப்பந்தங்களில் மிக ஆர்வமாக பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது அவற்ளுள் முக்கியமாக, ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மேலமைப்பு உடன்படிக்கை, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உயிரியல் பல்வகைமைக்கான ஒப்பந்தம், மற்றும் ஓசோன் படலத்திற்கு சேதம் விளைவிக்கும் பொருட்கள் தொடர்பான மான்ட்ரியால் நெறிமுறை (Montreal Protocol) ஆகியவையை குறப்பிடலாம். குறிப்பாக இந்த நெறிமுறையின் கீழ், சவூதி அரபியா ஓசோன் அடுக்கை சேதப்படுத்தும் அனைத்து வகை பொருட்களையும் 100% அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது, சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சவூதி அரசின் உறுதியான அர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது.

பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நீரோடு தொடர்பான சவால்களை நிவர்த்தி செய்வதற்கான அதன் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் இராச்சியத்தின் தொலைநோக்கு 2030 க்கு இணங்கவும், ரியாத்தை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நீர் அமைப்பைத் தொடங்குவதில் சவூதி அரேபியா இராச்சியம் முன்னணி மற்றும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

G20 உறுப்பினராக தனது வழிகாட்டும் பங்கை மற்றும் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டு, சவூதி அரபியா பசுமை பொருளாதாரத்தை கட்டியமைக்கும் முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த பசுமை பொருளாதாரம், புதுமை, தொழில்நுட்பம், மற்றும் அறிவுத் திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும், சவூதி அரபியா தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பயனுள்ள கூட்டு முயற்சிகளை (effective partnerships) உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

சவூதியின் பொது முதலீட்டு நிதி (PIF) மற்றும் தேசிய வளர்ச்சி நிதி (NDF), சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களை ஆதரிக்க சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், புதிய முதலீட்டுத் திட்ட வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளில் நிலைத்த வருவாய்களை (sustainable returns) அடைவதிலும் பெரும் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரபியாவில் இதுவரை சுற்றுச்சூழல் துறையில் அடைந்துள்ள சாதனைகள், நீண்ட கால உறுதியான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியின் தொடக்கமாகும். இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு விருப்பத் தெரிவு அல்ல மாறாக ஒரு அவசியமான இருப்புப் பிரச்சினை (existential necessity) என உறுதி கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அரச தலைமையின் வழிகாட்டலின் கீழ் இயக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, சவூதி அரேபியா புவியைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச ஒற்றுமை, நிபுணத்துவ பரிமாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை இராச்சியம் வலியுறுத்துகிறது.

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ. காலித் ஹமூத் அல்-கஹ்தானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *