உள்நாடு

178 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை நியமிப்பதில் இழுபறி நிலை

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளுக்கு தெளிவாக ஓர் அரசி யல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு 50 சதவீதம் அல்லது அதனை விட அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ளாமையால் அந்தச் சபைகளின் மேயர்கள், பிரதி மேயர்கள், நகரசபைத் தலைவர்கள், பிரதி நகரசபைத் தலைவர்களின் நியமனத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவால் விரைவில் வெளியிடப்படுமென்றும் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய உள்ளூராட்சி சபை ஆணையாளர்களால் மேற்குறிப்பிட்ட 178 சபைகளுக்குமான மேயர்கள், பிரதி மேயர்கள், நகர சபைத் தலைவர்கள், பிரதி நகர சபைத் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் கொழும்பில் நேற்று (02) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 339 உள்ளூராட்சி சபைகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் கடந்த 30ஆம் திகதி வரையில் கிடைத்த சகல உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. 24662490 வரையிலான வர்த்தமானிகளில் 25 மாவட்டங்களுக்குமான உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளோம். 2492ஆவது வர்த்தமானியூடாக இந்த உள்ளூராட்சி சபைகளுக்குள் 339இல் 161 சபைகளுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், நகர சபைத் தலைவர்கள், பிரதி நகரசபைத் தலைவர்கள் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அல்லது அதனை விட அதிகமான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்த சபைகளுக்காக மேயர்கள், பிரதி மேயர்கள், நகர சபைத் தலைவர்கள், உப நகர சபைத் தலைவர்களை நியமிப்பதற்கான அதிகாரமுள்ளது.

அதேபோன்று 178 உள்ளூராட்சி சபைகளுக்காக தெளிவாக ஓர் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக்குழு 50 சதவீதம் அல்லது அதனை விட அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ளாமையால் அந்த சபைகளின் மேயர்கள், பிரதி மேயர்கள், நகர சபைத் தலைவர்கள், பிரதி நகர சபைத் தலைவர்களின் நியமனம் உள்ளூராட்சி ஆணையாளர்களின் தலையீட்டால் முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய, 178 உள்ளூராட்சி சபைகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்காக உள்ளூராட்சி சபை ஆணையாளர்களுக்கு உரிய காலம் கிடைக்கும் வகையில் திருத்தப்பட்ட வர்த்தமானி மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சரால் வெளியிடப்படும். அதற்கமைய, மேற்குறிப்பிட்ட மீதமுள்ள உள்ளூராட்சி சபைகள் அந்த வர்த்தமானியின் பிரகாரமே உள்ளூராட்சி ஆணையாளர்கள் செயற்பட வேண்டிவரும். அவர்களே 178 சபைகளுக்கான பதவிகளுக்கான வர்த்தமானிகளை வெளியிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *