மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தில் விமரிசையாக நடைபெற்ற நிகழ்வுகள்
பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும், அனைத்து மொழி பாடசாலைகளுக்கிடையில் நான்காம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த எம்.எப்.எப் நிஹ்லா உட்பட மருத்துவ மற்றும் வர்த்தக பீடங்களுக்குத் தெரிவாகி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த ஏனைய அனைத்து சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் நூற்றாண்டை எட்டிப்பிடித்திருக்கும் பாடசாலையின் விஷேட சின்னம் வெளியீட்டு விழாவும் 2025-05-31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை பாடசாலை அதிபர் திரு எஸ்.ஆர் குமார் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.எப்.எப் நிஹ்லா, ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.எப் பஹ்மா, வயம்பா பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.யு.எம் ஸைனப், வயம்பா பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.எஸ்.எப் ஸஹ்தா, பேராதனை பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞான ஆய்வுகூட பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.ஆர்.எப் ரிப்தா, களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.எப் ஹப்ஸா, தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.ஏ.எப் ரைஸா, களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள எம்.எப்.எஸ் ஹஸான் ஆகியோரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அஷ்ஷெய்க். முஸ்தபா (ரஹ்) ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக ஸேம் ஜெம்ஸ் (ZAM GEMS) முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் அஹ்ஸன் ரிபாய் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக ஸேம் ஜெம்ஸ் (ZAM GEMS) பணிப்பாளர் அல்ஹாஜ் ரீதா ரிபாய், சிறப்பு அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஆர்.பி லியனகே மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளரும், பேராசிரியருமான ரங்கிக ஹல்வதுர ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அதிபர் எஸ்.ஏ குமார் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, வெலிகமையை சேர்ந்த பிரபல பாடகர் மெளலவி மின்ஸாரின் வாழ்த்துப் பாடலும் இடம் பெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழைய மாணவிகள் சங்கம் சார்பாக பழைய மாணவர்கள் சங்க செயலாளர் டாக்டர். மர்ஜான் ஹுஸைன், சாதனை படைத்த மாணவி நிஹ்லா பைஸர், கோட்டக் கல்வி பணிப்பாளர் திருமதி எம்.ஆர்.பி லியனகே, விஷேட அதிதி மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளரும், பேராசிரியருமான ரங்கிக ஹல்வதுர, பிரதம அதிதி ஸேம் ஜெம்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் அஹ்ஸன் ரிபாய் ஆகியோர் உரையாற்றினர்.
நூற்றாண்டை நெருங்கியுள்ள ஸேம் ரிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயம் கடந்த காலத்தில் நாட்டிற்கும், சமூகத்திற்கும் தலை சிறந்த புத்திஜீவிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளதை இங்கு உரையாற்றிய அதிதிகள் பாராட்டிப் பேசினர்.
இப்பாடசாலையை கட்டியெழுப்புவதில், மர்ஹும் சிறீலங்கா சிகாமணி ஸேம் ரிபாய் ஹாஜியார் ஆற்றிய பணிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
இப்பாடசாலையிலிருந்து எதிர்காலத்தில் தலைசிறந்த கல்விமான்கள் உருவாக வேண்டுமென்பதே மர்ஹும் ரிபாய் ஹாஜியாரின் கனவாகும்.
அந்தக் கனவை நிறைவேற்ற மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று சாதனை நிலைநாட்ட வேண்டும். அதில் ஓர் அங்கமாக இன்று பல மாணவர்கள் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் பிரவேசிக்கின்றனர்.
எதிர்காலத்திலும் இதை விடக் கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று பாடசாலைக்கு புகழ் சேர்க்க வேண்டுமென்றும் அதிதிகள் இங்கு வலியுறுத்தினர்.
நிகழ்வில் நூற்றாண்டுக்கான சின்னம் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு, சாதனை படைத்த மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
நிகழ்வில் முன்னாள் அதிபர்கள், முன்னாள் பிரதி அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க, பழைய மாணவர் சங்க, பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், பெருமளவிலான பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.












(பேருவளை பீ.எம்.முக்தார்)