கட்டுரை

உழ்ஹிய்யா கொடுப்போம், ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடுவோம்

அல்லாஹ்வின்
கட்டளையை இதயத்தில் இறுக்கமாய் கொண்டு எத்தனையோ காலங்களாக தமக்கு ஒரு பிள்ளையில்லை என ஏங்கித் தவித்து இன்னல் பல கண்டு இறுதியில் அன்புடனும் ஆசையுடனும் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக பலியிடத் துணிந்த இப்ராஹிம் (அலை) அவர்களின் உயர்வான ஒப்பற்ற மனதையும் ஒரு மாபெரும் தத்துவத்தையும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.

புனித ஹஜ் கடமையானது இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையாகும். வசதி படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த செல்வந்தர்கள் அனைவரும் கண்டிப்பாக புனித ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும். சக்தியிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றாமலிருப்பது பெரும் குற்றமாகும்.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பமே நம் மனக்கண் முன் நிழலாடும். இஹ்ராம் கட்டுதல், கஃபாவை வலம்வருதல், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல், ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடுதல், புனிதம் நிரம்பிய ஸம்ஸம் நீர் அருந்துதல், அரபாவில் தரித்தல், குர்பான் கொடுத்தல், மினாவில் கல்லெறிதல் போன்ற அனைத்து கிரியைகளிலும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகம் பிரதிபலிக்கின்றன.

ஹஜ்ஜுக்கான ஒன்றுகூடல், முஸ்லிம் உம்மத்தின் ஐக்கிய உணர்வை பறைசாற்றும் சர்வதேசளவிலான வருடாந்த மாநாடாக கணிக்கப்படுகிறது. தொழுகையில் ஆரம்பிக்கும் முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் ஹஜ் ஒன்றுகூடலில் மேலும் வலுப்பெறுகிறது.

நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வாழ்ந்த ஜாஹிலிய்யா காலத்து மக்கள் கூட இவ்வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். இணைவைப்போடு மூட நம்பிக்கைகளும் அனாச்சாரங்களும் நிறைந்த ஒரு வழிபாடாகவே இது இருந்து வந்தது. இது ஒரு வழிபாடு என்பதை விடவும் அரேபிய தீபகற்ப மக்கள் ஒன்றுகூடும் வியாபார சந்தையாகவே திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் இந்நிலை முற்றாக மாற்றப்பட்டு இணைவைப்பும் மூட நம்பிக்கைகளும் அனாச்சாரங்களும் முற்றாக அகற்றப்பட்டு வருடாந்தம் ஒன்றுகூடும் சர்வதேச இஸ்லாமிய சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளடக்கிய மாநாடாக அமையப்பெற்றது.

முஸ்லிம்களின் பெருநாள் தினம் தனித்துவமானதாகவும் முன்மாதிரியானதாகவும் அமைய வேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்லர். நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்தே வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்கக் கூடாது. ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார கொள்கைச் சுதந்திரங்களும் இன்னுமொருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்களில் ஒன்றாகும்.
இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தில் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது ஒரு வழியால் சென்று மற்றுமொரு வழியால் திரும்பி வருவார்கள். இதன் மூலம் பலரை சந்திக்கவும் ஏழைகளுக்கு உதவி புரியவும் கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள்.

பெருநாள் தினத்தில் சகோதர மதத்தவர்களுடன் புரிந்துணர்வு கருதிய ஒன்றுகூடல்களை நடாத்தலாம். இதன் மூலம் இரு சாரார் மத்தியில் நிலவும் தப்பபிப்பிராயங்கள் நீங்கி பிரதேச மற்றும் தேசிய அமைதிக்கு வழியேற்படும்.
பெருநாள் தினத்தில் நாம் பின்பற்றி நடக்க வேண்டிய நபி வழியில் வந்த செயற்பாடுகளும் உண்டு. ஒரு ஊரில் அல்லது மஹல்லாவில் வாழும் முஸ்லிம்கள் தனித்தனியாக அல்லது குழுக்களாக பிரியாமல் சகலரும் ஒன்று சேர்ந்து ஒரு திறந்த வெளியில் அல்லது மைதானத்தில் இது முடியாத போது ஒரு பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நடத்த வேண்டும்.
பெருநாள் தொழுகையானது ஆண். பெண் இரு சாராரும் தொழலாம். என்று இஸ்லாம் கூறுகின்றது. மாதவிடாய் உள்ள பெண்களும் பெருநாள் தொழுகை நடக்கும் மைதானத்திற்கு செல்ல முடியும். மாதவிடாய் உள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு விலகி பெண்களின் பின்னால் இருத்தல் வேண்டும். மாதவிடாய் உள்ள பெண்கள் தக்பீர் கூறவும் துஆ கேட்கவும் முடியும்.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்தவுடன் இமாம் நிகழ்த்தும் குத்பா உரையை அனைவரும் கேட்க வேண்டும். தொழுகையை போன்றே குத்பாவும் ஒரு இபாதத் என்பதை மறக்கலாகாது. இவ்வாறு ஒரு இமாமுக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் முஸ்லிம் சமுதாய அமைப்பு வலுப்பெறுவதோடு தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் பலவகையான நன்மைகளையும் அல்லாஹ்வின் அருளையும் பெறும் வாய்ப்பை பெறுகின்றனர். ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு தியாகப்பெருநாளாகும் எனவே ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் காலைச்சாப்பாடு சாப்பிடாமல் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவார்கள். எனவே நாம் காலைச்சாப்பாட்டை சாப்பிடாமல் பெருநாள் தொழுகைக்கு புறப்பட வேண்டும். பெருநாள் தொழுகை முடிந்ததும் தான் சந்திக்கும் சகோதரர்களுக்கு “தகப்பலல்லாஹு மின்னி வமின்க” உங்களுடையதும் என்னுடையதும் நற்செயல்களையும் வாழ்த்துக்களையும் அல்லாஹ் அங்கீகரிப்பானாக! என்று கூறி வாழ்த்து தெரிவிப்பது சுன்னத்தாகும்.
பெருநாள் தினங்களில் உறவினர்கள், நண்பர்கள், மார்க்க ஊழியர்கள் அனைவரையும் கண்டு பேசி உபசரித்து, வாழ்த்துக் கூறி தங்களிடையே பற்றையும் பாசத்தையும் அன்பையும் ஆதரவையும் மென்மேலும் அதிகரித்துக் கொள்வதும் சிறந்த செயலாகும்.
புனித ஹஜ் பெருநாள் தினத்திலும் அதைத் தொடர்ந்துவரும் துல்ஹஜ் மாதம் 11,12.13 ஆகிய தினங்களிலும் வசதியுள்ள ஒரு முஸ்லிம் நிறைவேற்றும் மிகச் சிறந்த வணக்கமே உழ்ஹிய்யா (குர்பான்) கொடுப்பதாகும். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற மிருகங்களை அறுத்து தானும் உண்டு பிறருக்கும் புசிக்கக் கொடுத்து அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நற்செயலே உழ்ஹிய்யா ஆகும்.
ஸகாத் கொடுப்பவர்கள்தான் உழ்ஹிய்யா கொடுக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. வசதியுள்ளவர்கள் அனைவரும் கொடுக்க வேண்டும். ஒட்டகம் அல்லது மாடாக இருந்தால் ஏழு பேர் சேர்ந்து கூட்டாக கொடுக்கலாம். இது ஆண்களுக்கு மட்டும்தான் என்பதில்லை. பெண்களும் தாராளமாக இதில் பங்கேற்கலாம். உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது மிகவும் சிறந்தது. அப்படி இல்லையென்றால் வேறொருவருக்கு பொறுப்பு கொடுக்கவும் முடியும். அவர் அந்த இடத்திற்கு சமூகமளிப்பது சிறந்தது. தைரியமிருந்தால் பெண்களும் அறுக்கலாம். அறுப்பதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட வேண்டும். நாம் அறுக்கின்ற போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூற வேண்டும்.

“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கின்ற நிலையில் துல்ஹஜ் மாதம் பிறந்ததும் நகம், முடி எதையும் வெட்ட வேண்டாம்” . ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கும் நிலையில் நகம் அல்லது முடி ஏதாவது ஒன்றை வெட்டினால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.
உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுகையில் பிற சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாழ்படுத்தாத வகையில் அதை நிறைவேற்றுவது முக்கிய அம்சமாகும் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. நம் மதக் கிரியைகளை நிறைவேற்றும் போது பிற மதத்தினரின் அதிருப்தியையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்வது நல்லதல்ல.
மிருகங்களை அறுப்பதற்கும் இறைச்சியைப் பெற்றுகொண்டு சுற்றாடலுக்கு மாசு ஏற்படாத வகையில் கழிவுப்பொருட்களை அழித்தொழிப்பதற்கும் போதிய இடவசதி இருக்கும்வரை இந்த நடைமுறையில் பிரச்சினைகள் தலைதூக்குவதில்லை. பல்லின மக்களும் கலந்து வாழும், இடப்பற்றாக்குறை நெருக்கடி மிக்க பகுதிகளில் மிருகங்களை அறுப்பதும், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் எப்போதுமே சர்ச்சைக்குரியனவாகின்றன.
உழ்ஹிய்யா கொடுக்கும் விடயத்தில் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மிருகங்களை அறுப்பதற்காக கொண்டுசெல்லும் போது அதற்கு இம்சை செய்வதோ, அறுத்ததன் பின் இரத்தம் வடியும் நிலையில் பாதைகளில் இறைச்சியைத் தூக்கிச் செல்வதோ கூடாது. அறுத்த பிராணியின் கழிவுகளான தோல், எலும்புகள், கொம்பு, சாணம் போன்றவற்றை துர்நாற்றம் வீசும் நிலையில் பாதையோரங்களில் வீசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவைகளை குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும். ஆனால் நம் சகோதரர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிடுகின்றனர். இது கவலைக்குரிய விடயமாக உள்ளது. இது போன்ற தவறுகளை விடுவதால்தான் பிற சமூகத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதை உழ்ஹிய்யா கொடுக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவது கட்டாயக் கடமையாகும்.
எமது நாட்டின் இறைச்சிக் கடைகள் தொடர்பான உள்ளூராட்சி அமைப்புகளுக்கான கட்டளைச் சட்டம் அமுலில் உள்ளதோடு அதன் பிரகாரம் இறைச்சியின் பொருட்டு கால்நடைகளைக் கொல்வதற்குப் பாதுகாப்பான கொள்கலன்களிலேயே அறுக்கப்பட வேண்டும் என்ற நியதியும் உண்டு. உழ்ஹிய்யாவின் பொருட்டு மிருகங்களை அறுப்பதற்காக அவ்வப் பிரதேச உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் பேசி, அதற்காக செலுத்த வேண்டிய சிறு கட்டணங்களையும் செலுத்தி, பாதுகாப்பான முறையில் சுற்றாடலுக்கும் சுற்றாடலிலுள்ள பிற சமூகத்தவர்களுக்கும் தொந்தரவில்லாதவாறு இக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.
இறைச்சிக்காக ஆடு, மாடுகளை கொல்வது எமது நாட்டு சட்டத்திலுள்ள விடயமாகும்.

வீடுகளில் அல்லது வைத்தியசாலைகளில் நோயாளர்களாக துன்பத்துடன் பெருநாளை கொண்டாட முடியாதவர்களாக பெருநாள் பொழுதை கழிக்கிறவர்களிடமும் சிறைச்சாலையில் துன்பப்படும் கைதிகளிடமும் சென்று சந்தித்து சுக துக்கங்களை விசாரித்து உணவுகள், பழங்கள், பலகாரங்கள் வழங்கி மனதிற்கு ஆறுதல் அளிக்கலாம். இலவச வைத்திய முகாம்கள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்

இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் எமது பெருநாளின் சிறப்புக்களை மாற்று மத இனங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவ்வாறு நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ளும் போதுதான் இந்த நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்ப முடியும். பெருநாள் காலங்களில் கட்டியெழுப்பும் முன்மாதிரியான நிகழ்ச்சிகளை அந்தந்த ஊர்களின் கழகங்கள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் ஏற்பாடு செய்வது வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். இவ் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் பெருநாளாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
எமது நாட்டில் உழ்ஹிய்யா சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் நிம்மதியாகவும் மன சந்தோஷத்துடனும் உழ்ஹிய்யா கொடுக்கும் நிலைமை ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபான்மையினராகிய நாம் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து புரிந்துணர்வுடன் உழ்ஹிய்யா கொடுப்போம் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடுவோம்.

(கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *