ஜூன் 14 கம்பஹா மாவட்டம் தழுவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்; 5000 அதிகாரிகள் களத்தில்
முழு கம்பஹா மாவட்டத்தையும் உள்ளடக்கிய விஷேட ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே நாளில் 60,000 வீடுகளை சோதனை செய்யும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் 14 சனிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறும் என்று கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே அண்மையில் (28) தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படவுள்ள டெங்கு அபாயத்தை குறைப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக மாவட்டத்திலுள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அத்துடன் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் என 5000 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
குறித்த தினத்தில் மாவட்டத்திலுள்ள 1177 கிராம சேவகர் பிரிவுகளிலும் குறைந்தது தலா 50 வீடுகள் மற்றும் சுற்றுச்சூழலை சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் வீட்டையும் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பொதுமக்களை அறிவூட்டுதல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்களின் இணைந்த விஷேட வேலைத்திட்டமொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(ரிஹ்மி ஹக்கீம்)