15 வயதிற்குட்பட்ட கடினப் பந்து கிரிக்கெட்; தமது கன்னிப் போட்டியில் இலகு வெற்றியுடன் வரலாறு படைத்தது கல்பிட்டி அல் அக்ஸா
இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் சங்கத்தின் 15 வயதிற்குட்பட்ட கடினப் பந்து கிரிக்கெட் சம்பியன் கிண்ணத்தின் முதல் லீக் சுற்றுப் போட்டியில் கல்பிட்டி நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய முதல் வெற்றியை பதிவு செய்தது கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி.
இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் புத்தள மாவட்ட 15 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கடினப் பந்து கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி பங்கேற்றுள்ளது. அத்துடன் இதில் களம் கண்டுள்ள ஏனைய பலமிக்க 5 பாடசாலை அணிகளுடன் தலா ஒரு முறை முதல் சுற்று லீக் போட்டிகளில் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி மோதும் வண்ணம் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் (29) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கடினப் பந்து போட்டியில் அப் பாடசாலை கல்பிட்டி நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய அணியை கல்பிட்டி கே.சி.சி மைதானத்தில் எதிர்கொண்டது. மொத்தமாக 50, 50 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ் போட்டியாக இப் போட்டி இடம்பெற்றது.
அதற்கமைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கேற்ப முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய அணி 18.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சஸ்வின் மற்றும் நித்தீஷ் ஆகியோர் தலா 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அபான் மற்றும் ஜெஸான் ஆகியோர் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 12 ஓவர்களில் தமது சகல விக்கட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களுக்குள் சுருண்டனர். துடுப்பாட்டத்தில் ஜெஸான் 14 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் டிரோன் 7 விக்கெட்டுகளை அள்ளிச் சுருட்டினார்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸின் 22 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நரக்கள்ளி அணி 28.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை பெற்று தமது இனிங்ஸை நிறைவு செய்தது. துடுப்பாட்டத்தில் விக்னேஷ் மற்றும் டிரோன் ஆகியோர் தலா 16 ஓட்டங்களை எடுத்தனர். பந்துவீச்சில் ரிபாஹக் மற்றும் இனாஸ் ஆகியோர் முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.
பின்னர் நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 108 என்ற சவால் வெற்றி இலக்கினை நோக்கி தமது 2 ஆவது இன்னிங்ஸில் களம் நுழைந்த அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 18.4 ஓவர்களில் வெறும் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று தமது கன்னிப் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. துடுப்பாட்டத்தில் ஜெஸான் 30 ஓட்டங்களையும் , இனாஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஜொயல் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கேற்ப தமது முதல் போட்டியில் வெற்றி பெற்ற அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 15 வயதிற்குட்பட்ட அணியின் வீரர்களுக்கும், அதிபர் மற்றும் பயிற்றுவிப்பாளர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி தமது 2ஆவது லீக் ஆட்டத்தில் பலமிக்க வண்ணாத்திவில்லு பாடசாலை அணியை எதிர்வரும் புதன்கிழமை அவர்களின் சொந்த மைதானத்தில் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




(அரபாத் பஹர்தீன்)