கல்பிட்டி அல் அக்ஸாவின் 5 மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் காசோலை வழங்கி வைப்பு
கடந்த வருடம் தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம்பிடித்த கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 5 வீரர்களுக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் போசனையை அதிகரிப்பதற்கான காசோலை இன்று (28) வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் விளையாட்டிற்கு சக்தி எனும் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களின் போசனைக்கு உதவும் வேளைத்திட்டத்திற்கு அமைய கடந்த வருடம் 20 வயதிற்குற்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் பிடித்த கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணியின் 5 மாணவர்களுக்கான காசோலை இன்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமஹேவினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அல் அக்ஸா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ரிஷாத் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர் ரியாஜ் ஆகியோரினால் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமான மனு ஒன்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமஹேவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




(அரபாத் பஹர்தீன்)