அம்பாறையில்”உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேதமடைந்த வீடுகளைத் திருத்திக் கொள்ளவும், புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்குமான ஆரம்ப கட்ட காசோலை வழங்கி வைக்கின்ற நிகழ்வு அம்பாறை பிரதேச செயலகத்தில் நேற்று (26) திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனியின் தலைமையில், கிராமிய உட் கட்டமைப்பு சமூகப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்றது.
இதில், அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம உட்பட திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மஞ்சு ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண NHD பொறியியலாளர் அச்சுதன் உட்பட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் அம்பாறை நகர சபைக்கு உட்பட்ட கலை கலாசார மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றதோடு, அதன் பின்னர் அக்கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.





(எம்.எஸ்.எம்.ஸாகிர்)