இருளில் மூழ்கிய மத்திய முகாம்; சாலை மின் விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் அதிக சனத்தொகை நடமாட்டமுள்ள வீதிகளில் ஒன்றான மத்திய முகாம் பிரதான வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் திடிரென்று நிறுத்தப்பட்டதையடுத்து வீதிகளில் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் எரியாமையினால் வீதிகள் இருளில் மூழ்கி காணப்படுகின்றது. இதற்கு காரணம் சிலரின் நாசகார செயல்கள் எனவும், இச் செயல்களினால் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அதிக விபத்துக்களை சந்திக்கக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வீதிகளில் அங்கும் இங்கும் பல கட்டாக்காலி மாடுகள் மற்றும் தெரு நாய்களில் சிக்குண்டு பல விபத்துக்கள் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்களும் அதிகம் அதிகம் காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சிலர் நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரிகள் துரிதகதியில் கவனம் செலுத்தி வீதிகளின் மின் விளக்குகளை மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் திருத்தி அமைத்து தருமாறும் மேலும் இது போன்ற அசம்பாவிதங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(ஏ.எச்.எம்.ஹாரீஸ் – மத்திய முகாம்)