இரட்டைக் கொடிச் சின்னத்தை பிரதிநிதித்துவம் செய்து கல்பிட்டி பிரதேச சபைக்குச் செல்கிறார் இளம் சமூக சேவையாளர் முஸம்மில்
இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்பிட்டி பிரதேச சபையின் இரட்டை கொடி சின்னத்தில் தூய தேசத்திற்காக கட்சியினை பிரதிநிதித்துவம் செய்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு போனஸ் ஆசனத்திற்கு மண்டலக்குடா வட்டாரத்தில் போட்டியிட்டு 8 வாக்குகளால் தோல்வியடைந்த முஸம்மில் நியமிக்கப்பட்டதுடன் , நியமனக் கடிதம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதி அமைச்சரும், முன்னாள் புத்தளம் நகர பிதாவுமான காலஞ்சென்ற மர்ஹூம் கே. அப்துல் பாயிஸின் 4ஆவது நினைவெழுச்சி நிகழ்வில் பங்கேற்ற தூய தேசத்திற்காக கட்சியின் தலைவர் இஷாம் மரைக்கார் குறிப்பிடுகையில், “புத்தளத்திற்கு உள்ளே பிரதேச பிரிவுகளை வளர்த்து, விஷமூட்டி, அரசியல்வாதிகளை உருவாக்கி, கோடிகளை கொடுத்து, தேசிய பொய் முதலீடுகளை செய்து தங்களது கட்சிகளை வளர்க்கும் மோசமான சூழலில் மக்கள் நமக்குத்தந்த ஆதரவு மிகப்பெரிய வெற்றியாகும்.
வரலாற்றில் முதல் தடவையாக தூய தேசத்திற்கான கட்சியின் அரசியல் புத்தளம் தேர்தல் தொகுதியில் மிக முக்கியமான 6 ஆசனங்களை மக்கள் ஆதரவோடு பெற்றெடுத்து “சபைகளை ஆள்வது யார்” என்ற தீர்மானிக்கும் சக்தியாக எழுந்து நிற்கிறது.
பெற்றெடுத்த 6 ஆசனங்களில் முதல் ஆசனம் கல்பிட்டி பிரதேச சபைக்கு மறைந்த தலைவரின் ஆதரவாளர்களான மஹீன் மற்றும் ரினாச் ஆகியோரால் KABயின் நான்காவது நினைவெழுச்சி நிகழ்வில் வைத்து கொடுக்கப்பட்டது.
இந்த நியமனம் கட்சி தலைவரின் கையொப்பத்தோடு கல்பிட்டி பிராந்தியத்தின் அமைப்பாளர் ஹஸ்லான் அவர்களினால் மண்டலக்குடா வட்டாரத்தில் 8 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த சகோதரர் முஸம்மிலுக்கு அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டது.” என்றார்.
(ஹஸ்லான் ரஸாக்- கல்பிட்டி)