யுத்த நிறைவை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமை நல்லிணக்க அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பதினாறு வருட நிறைவை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்ச்சி நேற்று முன்தினம் (19) தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பாக அலுவலக நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மூன்று மொழிகளிலும் வெளியிடுவதற்கு ஏற்பாடு எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுடன் இணைந்ததாக ஆரோக்கியமான உலகம், ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக சமாதானத்திற்கான தீபங்கள் ஏற்றப்பட்டதுடன், நாடளாவிய ரீதியிலுள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சகவாழ்வு சங்க உறுப்பினர்களை நிகழ் நிலை ஊடாக இந்நிகழ்வுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமய தலைவர்களால் ஆரோக்கியமான சமுதாய ஒன்றை உருவாக்குவதற்காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் மௌலவி முனீர் முழப்பர், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் குமாரி, காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மஹேஷ் கடுலந்த, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் நிர்வாகத்தினர், இழப்பீட்டு அலுவலக உத்தியோகத்தர்கள், நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு மற்றும் அரச மொழிகள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.









(ரிஹ்மி ஹக்கீம்)