உள்நாடு

மலேசியாவில் நடைபெறும் 64 ஆவது சர்வதேச கிராஅத் போட்டிக்கு இலங்கையிலிருந்து இருவர் தெரிவு..!

மலே‌சியாவில் நடைபெறும் 64 ஆவது சர்வதேச கிராஅத் போட்டிக்காக இலங்கையிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கண்டி, தஸ்கர அல் – ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியிலிருந்து அஷ்ஷெய்க் காரி சுஹைல் முஹ்ஸின் (ஹக்கானி) மற்றும் பெண்கள் பிரிவில் வெல்லம்பிட்டிய மத்ரஸதுல் ஹுதாவிலிருந்து பாத்திமா ஹசீபா நுஹ்மான் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான முதல் சுற்று, இணைய (Online) வழியாக நடைபெற்றது. இதில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டனர். அதிலிருந்து 25 நாடுகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகின.

மேலும் இறுதி சுற்றானது மலேசியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த இரு போட்டியாளர்களையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவா‌ஸ் அவர்கள் திணைக்களத்துக்கு அழைத்து, அவர்களுக்கான ஆவணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்து வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தார்.

மேற்படி நிகழ்வில், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என். நிலூபர் மற்றும் திணைக்களத்தின் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் எம். எம்.எம்.முப்தி முர்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியாளர்கள் இலங்கையில் இருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை மலேசியாவுக்குச் செல்லவுள்ளனர்.

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *