உள்நாடு

கண்டியில் வசமாக மாட்டிக்கொண்ட பிரியாணி

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, கம்பளை போத்தலப்பிட்டியில் அமைந்துள்ள ‘வைட் வின்ஸ்’ நிகழ்வு மண்டபத்தில், நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, தனது ஆதரவாளர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்கத் தயாராகும் போது, கண்டி உதவித் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், குறித்த நிகழ்வை இரத்துச் செய்ததுடன், உணவுப் பொருட்களில் ஒரு பகுதியையும் அவர்கள் காவலில் எடுத்து, கம்பளை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்ல முன் வந்ததாகத் தெரிய வருகிறது.

திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு ‘பிரியாணி’ வழங்கத் தயாராக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த புகாரின் பேரிலேயே, அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். சுமார் 1,500 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட உணவில் இருந்து, பெரிய தொட்டிகளில் இந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கத்தரி மோஜு, ஒரு சட்னி மற்றும் மற்றொரு கறி ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில், நீதியமைச்சர் அலி சப்ரி, நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, மஹிந்தானந்த அழுத்கமகே, சாந்தினி கோங்கஹகே, வேலு குமார், கம்பளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் சமந்த அரண குமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், அவர்கள் இப்பொதுக் கூட்டத்திற்கு வருவதற்கு முன், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இங்கு வந்து, இந்த உணவு வகைகளை, தங்கள் காவலில் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *