ஜூலை முதல் மின் கட்டணம் குறையும்..!
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, 0-30 அலகு ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுககள் 50 ரூபாயில் இருந்து 30 ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் ‘மின் நிலையத்தில் பாரிய மாற்றத்திற்காக’ சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், முற்றிலும் புதிய மின் நிலையத்துக்கான சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஆதரவு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மற்றும் ஏனையோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.