உள்நாடு

கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களில் ஒருவராக மௌலவி காதிர் கான் கௌரவிப்பு.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை, கல்லொழுவையைச் சேர்ந்த மூத்த ஆலிம்களில் ஒருவராக, மௌலவி ஐ.ஏ. காதிர் கான் (தீனி) அவர்கள் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

வத்தளை – ஹுணுப்பிட்டிய, “ஹெவன்’ஸ் கேட் பென்கட் ஹோல்” ( Heaven’s Gate Banquet Hall ) வரவேற்பு மண்டபத்தில், (23) வியாழக்கிழமை இடம்பெற்ற கம்பஹா மாவட்ட 56 மூத்த உலமாக்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின்போதே, மௌலவி காதிர் கான் அவர்களும் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை, கல்லொழுவை கிராமத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிற்கு “காதிர் கான்” என்ற பெயரிலும், “பண்டுவஸ்நுவர காதிர் கான், கலைக்கதிர், கலைப்பிரியன், கலைப்பிறை, இப்னு இப்றாஹீம், அபூ ரமழான்” ஆகிய புனைப் பெயர்களிலும் கதை, கட்டுரை, கவிதை, நாவல், நாடகம், துணுக்குகள் போன்றவற்றை 1981 முதல் இவர் எழுதி வருகிறார்.

இவர், குருநாகல் – ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டிய முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேர்ந்து, அதன்பின் பாணந்துறை தீனிய்யா அரபுக் கலாபீடம், மாதம்பை ஹியாஸிய்யா அரபுக் கலாபீடம் ஆகியவற்றில் இணைந்து, அவற்றில் அரபுக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்து “மௌலவி டிப்ளோமா” பட்டங்களைச் சூட்டிக்கொண்டவர்.

கொழும்பு – பல்கலைக் கழக கலைப்பீடத்தில் “ஊடகக் கற்கை நெறி டிப்ளோமா – 2001”, கோட்டை ஸ்ரீஜயவர்தனபுர – ஸ்ரீலங்கா சுற்றாடல்துறை ஊடகக் கற்கை நெறிக்கான முன்னணியில் “சுற்றாடல்துறை ஊடகக் கற்கை நெறி டிப்ளோமா – 2002” ஆகியவற்றையும் இவர் சிறப்புறப் பூர்த்தி செய்து, அவற்றில் ஊடகத்துறை டிப்ளோமா பட்டதாரியாகவும், 2019 ஜனவரி 29 ஆம் திகதியன்று கொழும்பு – தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற அரச விருது விழாவின்போது “கலாபூஷணம்” விருதும் பெற்று பேரும் புகழும் ஈட்டிக் கொண்டவர்.

அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம், கம்பஹா மாவட்ட ஊடக கொத்தணி ஆகியவற்றில் பொதுச் செயலாளராகவும், தேசிய முஸ்லிம் சமூக சேவை அமைப்பில் பணிப்பாளர் மற்றும் அமைப்பாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இவரது இஸ்லாமிய நற்சிந்தனைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் 1986 முதல் ஒலிபரப்பாகி வருகின்றன. சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலும் இவருக்குண்டு.

“அல் உஸ்ரா” எனும் பெயரில் (1992 முதல்) மாதாந்தம் வெளியிட்டு வரும் இஸ்லாமிய குடும்ப சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். அத்துடன், “சுடர் ஒளி, தினகரன், வீரகேசரி, தினக்குரல்” போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், ஒப்பு நோக்காளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தற்போது தமிழ், சிங்கள பத்திரிகைகளில், வானொலி தொலைக்காட்சி மற்றும் தமிழ் இணையத்தள ஊடக நிறுவனங்களில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணி புரியும் இவர், ஏற்கனவே அமைச்சக ஊடகப் பிரிவுகளில் ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

( அஷ்ரப் ஏ. சமத் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *