உலகம்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தல்

ரஷ்யாவில் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. அத்துடன் ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

ரஷ்யாவின் 11 நேர மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் வாக்களிக்கின்றனர். வெளிநாடுகளில் முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.

அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 3 நாட்கள் அதாவது நாளை மறுநாள் வரை (மார்ச் 17) நடைபெறவுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும். வெற்றி பெறும் வேட்பாளர், மே மாதம் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தவிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ், தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோரும் களத்திலுள்ளனர். எனினும், புடின் மீண்டும் வெற்றி பெற்று 5ஆவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *