உள்நாடு

கல்பிட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சமில இந்திக ஜெயசிங்க நியமனம்

கல்பிட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சமில இந்திக ஜயசிங்க நேற்று முன்தினம் (01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இயற்கை வளமிக்க, பல நாடுகளின் உல்லாசப் பயணிகளின் கவனத்தினை ஈர்த்துள்ள, இலங்கையின் அந்நியச் செலாவணியில் பெறும் செல்வாக்கு செலுத்தும் கல்பிட்டி பிரதேசத்திற்கு கடந்த பல மாதங்களாக நிரந்தர பிரதேச செயலாளர் ஒருவர் இல்லாமை பெறும் குறையாகக் காணப்பட்டு வந்தது.

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக இருந்த தனன்சூரிய இடமாற்றம் பெற்று நுவரெலிய பிரதேச செயலகத்திற்கு சென்றமையால் இவ்வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இதனை ஈடுசெய்ய பதில் பிரதேச செயலாளராக வாரத்தில் இரு நாட்கள் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தின் செயலாளர் மிலிந்த பிரபாத் நந்தசேன கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதியுடன் அவரின் பதில் கடமைக் காலம் நிறைவடைந்திருக்க, புதிய பிரதேச செயலாளராக சமில இந்திக ஜெயசிங்க நியமிக்கப்பட்டதுடன், நேற்று முன்தினம் (01) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

பதுளை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுமார் 15 வருடங்களாக பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளில் கடமையாற்றுவதுடன், இதற்கு முன்னர் கொத்மலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *