உலகம்

தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் முதலமைச்சராகவெற்றி பெற்று, “பாரத ரத்னா” விருது பெற்ற பெருமை எம்.ஜி. இராமச்சந்திரனைச் சாரும்.. – இன்று அவரது 107 ஆவது பிறந்த நாள்

எம்.ஜி. இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran), 1917 ஆம் வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதியன்று, இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள ‘நாவலப்பிட்டி’ என்ற இடத்தில் கோபாலன் மேனன் – சத்யபாமா தம்பதியினருக்கு 5 ஆவது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன். வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான் தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலேயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால், தினமும் சுமார் 20 சிறைக் கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, “இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம்” என்று கூற, அந்த நீதிபதி வேலையை இராஜினாமாச் செய்து விட்டார்.
அந்த இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாத ஆங்கிலேயர்கள், பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினார்கள். அதற்குக் காரணமாக, ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு ‘டைனமெட் வெடி’ வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, அவர் தனது குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார்.
பின்பு, நாவலப்பிட்டியில் காவல் துறையில் பணியாற்றி வந்த அவரது நண்பர் வேலுப்பிள்ளை என்பவரது உதவியுடன், அங்குள்ள ஒரு சிங்களப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
அதன்பின்னர், தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன், தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாததால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி, முதன்மை நடிகரானார்.
இவரது நடிப்பு, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணியை மணந்தார். முதல் பிரசவத்திற்காக தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின்னர், தங்கமணியும் உடல் நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார்.
இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய் காரணமாக இறந்தார்.
எம்.ஜி.ஆர். இரண்டாவது கதாநாயகனாக, தியாகராஜ பாகவதர் தயாரித்த ‘ராஜ முக்தி’ படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி.என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால், ஜானகியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு ‘மோகினி’ படத்தில் சேர்ந்து நடித்தபொழுது, இருவரும் நெருங்கிப் பழகினர்.
1950 ஆம் ஆண்டில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆர்., கதைத்தலைவனாகவும், ஜானகி கதைத்தலைவியாகவும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது.
அக்காலகட்டத்தில் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள், ஜானகியின் முதற்கணவரான கணபதி பட்டிக் கைகளில் கிடைத்தன. இதனால், கணபதி பட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. அதனைத்தொடர்ந்து, கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர். உம் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனாக ‘அப்பு’ என்ற சுரேந்திரனை தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும், எம்.ஜி.ஆர். க்கு குழந்தைகள் இல்லை.
1936 இல் ‘சதி லீலாவதி’ எனும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 இல் அவர் நடித்த ‘ராஜகுமாரி’ படம் வெளிவரும் வரை, அதிகம் புகழ் கிடைக்கவில்லை.
தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ்த் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டு, தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும், அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னர், முதன் முதலாக வெளிவந்த ‘காவல்காரன்’ திரைப்படமானது, மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆர். ரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது ‘சத்யா மூவிஸ்’ தயாரிப்பான ‘ரிக்சாக்காரன்’ படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, கடைசியாக வெளி வந்த திரைப்படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார். ‘நாடோடி மன்னன், அடிமைப் பெண்’ மற்றும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. ‘நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ மற்றும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆர். ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி.என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் முரண்பாடுகளால், எம்.ஜி.ஆர். கட்சியை விட்டும் வெளியேறினார். 1972 இல் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு, அக்கட்சி “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றியைப் பெற்றார். திரைப்படங்களின் மூலம் அவரடைந்த பேரும் புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகளின் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயர்களும், அவர் மிக விரைவில் மக்கள் ஆதரவைப் பெற உதவின. 1977 இல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, “தமிழ் நாட்டின் முதலமைச்சர்” ஆனார். 1984 இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல், “முதலமைச்சர்” ஆன ஒரே முதல்வரும் அவராவார். எம்.ஜி.ஆர். 1984 இல், அவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக “முதலமைச்சர்” பதவியை வகித்தது மட்டுமல்லாது, பதவியிலிருக்கும் போதே அவர் காலமானார். அவரது மறைவிற்குப் பின் அவருக்குப் “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். கட்சி 1988 இல் பிரிந்து, 1989 இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”, ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இவர், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும், தமிழ் நாட்டில் பலர் இவரைக் “கடவுள்” போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” கட்சிக்கு வாக்களிப்பவர்கள், இன்றும் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்” என்பது, எம்.ஜி.ஆர். ரால் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கத் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, தமிழ்நாட்டில் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டது. “விதவை” மற்றும் “ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், இலவச சீருடை வழங்குதல் திட்டம், இலவச காலணி வழங்குதல் திட்டம், இலவச பற்பொடி வழங்குதல் திட்டம், இலவச பாடநூல் வழங்குதல் திட்டம், வறட்சிக் காலத்தில் லொரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்” போன்ற திட்டங்களைச் செயற்படுத்தினார்.
1921 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு என, தனியே ஒரு “தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றிய உமா மகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருமையும் எம்.ஜி.ஆர். ரையே சாரும்.
இவர், தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகவிருந்த திரு எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் “தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்” உருவாக்கப்பட்டது.
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால், “தமிழ் ஈழம்” குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆர். இடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக இருக்கும்போதே வழங்கியிருந்தார்.
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான எம்.ஜி. இராமச்சந்திரன், 1987 டிசம்பர் 24 இல் தனது 70 ஆவது அகவையில், சென்னையில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். நினைவாக, சென்னையில் ‘மெரினா’ கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் “எம்.ஜி.ஆர். நினைவிடம்” அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர். இன் “மார்பளவுச் சிலை” அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். இன் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும், மக்களின் பார்வைக்கு தனிக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. “தாமரை மலர்” விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே, அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே, “நினைவுத்தூண்” ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். இன் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன், தினமும் ஆயிரக்கணக்கானோர், இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து, தங்களின் அன்புத் தலைவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *