விளையாட்டு

ஹசரங்கவின் சுழலில் சிம்பாப்பே சிக்கிக்கொள்ள, தொடர் இலங்கை வசமானது.

சிம்பாப்பே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2:0 என வெற்றி கொண்டது.

சுற்றுலா சிம்பாபே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கழுவப்படதுடன் 2ஆவது போட்டியில் ஜனித் லியனகேயின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று (11) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக ஆரம்பமான 3ஆவதும் இறுதியுமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. இதற்கமைய சிறப்பான ஆரம்பத்தை சிம்பாப்பே அணி பெற்றிருக்க மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நிற்க ஆரம்பித்த ஆட்டத்தில் ஹசரங்க சுழலில் மிரட்ட அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது சிம்பாப்பே அணி. இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட போட்டி சில மணி நேரம் தடைப்பட்டது.

பின்னர் 27 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு போட்டி ஆரம்பிக்க ஹசரங்கவின் சுழல் ஜாலம் தொடர சிம்பாப்பே அணியால் 22.5 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுக்க முடிந்ததுடன் 96 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. துடுப்பாட்டத்தில் ஜோய்லோட் கும்பி 34 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அசத்திய ஹசரங்க 5.5 ஓவர்களில் 19 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்.

பின்னர் மிக இலகுவான வெற்றி இலக்கினை விரட்டிய இலங்கை அணிக்கு அணித்தலைவரான குசல் மெண்டிஸ் அரைச்சதம் விளாச 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி. இதனால் தொடர் 2:0 என இலங்கை வசமானது. குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றார். போட்டியின் நாயகனாக ஹசரங்கவும், தொடரின் நாயகர்களாக ஜனித் லியனகேவும் தெரிவாகினர்.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *