உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. 

இன்று (31) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார். 

இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டுள்ளார். 

இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், வைத்தியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து அண்மையில் கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி பின்வருமாறு தெரிவித்தார்: 

“வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். அதனால் வரலாற்றில் அவ்வாறான விடயங்கள் பெரியளவில் நடந்ததும் இல்லை. குறிப்பாக இந்த தொழிற்சங்கம் அவ்வாறான காரியங்களைச் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. கடந்த சில நாட்களாகக் கூறப்பட்ட விடயங்களில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. எவ்வாறாயினும், வைத்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதற்குச் செவிசாய்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *