உள்நாடு

புத்தளத்தில் ஆரம்பமானது சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும், விற்பனையும்

புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் மாபெரும் கைத்தொழில் கண்காட்சியும், மலிவு விற்பனையும் வெள்ளிக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்டதுடன் சனிக்கிழமை (28) இரவு 11 மணிவரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறும்.

பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜீவைரியா தலைமையில் வெள்ளிக்கிழமை (27) காலை 09 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் , மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் மாவட்டத்தின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் துணைப் பணிப்பாளர் எஸ்.எல்.குடா விடாநயக ஆகியோருடன் மனித உரிமைகள் நிறுவன பணிப்பாளர் , அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கைத்தொழில் பயிற்சி வழங்கப்பட்ட பெண்கள் பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள், சவர்க்கார வகைகள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள், மூலிகை செடிகள், பூ மரங்கள் மற்றும் பெண்களுடைய பல்வேறு உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன் அதன் விற்பனையும் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வின் போது கைத்தொலைப்பேசி பழுது பார்த்தல் பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது அத்தோடு பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தில் தொடர்ந்து கடமையாற்றி வரும் ஜே.வீ. சுபாஷிணி ( வெளிக்கள உத்தியோகத்தர்), எப் நிஹ்லா (கணக்காளர்), எச். எப் ஹூமைதா ( வெளிக்கள உத்தியோகத்தர்) ஆகிய மூவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *