உள்நாடு

கொழும்பில் கொண்டாப்பட்ட பாகிஸ்தானின் தேசிய தினம்..!

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம் இலங்கையில் கோலாகலமாகக் கொண்டாட்டம் இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இணைந்து பாகிஸ்தானின் 86-வது தேசிய தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடின. பாகிஸ்தானை ஒரு வலிமையான, துடிப்பான,4 முற்போக்கான, ஜனநாயக மற்றும் நலன்புரி அரசாக கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாடு இதன்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இன்று (23) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் செல்வி சுனைரா லத்தீப் (Zunaira Latif) அவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட அந்நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

துணைக்கண்டத்தின் முஸ்லிம் மக்களுக்காக தனி தாயகம் கோரி 1940 மார்ச் 23 அன்று லாகூரில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் விளைவாக, 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக உருவெடுத்தது.

இந்நிகழ்வின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டன. தலைவர்கள் இருவரும் இந்த தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், ‘குவைத்-இ-அசாம்’ (Quaid-e-Azam) முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்கு தமது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தினர்.

பதில் உயர்ஸ்தானிகர் தனது உரையில், பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நீண்டகால நெருக்கமான உறவைப் பேணி வருவதாகத் தெரிவித்தார். வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நிலவும் பன்முகப்படுத்தப்பட்ட உறவுகள் பாகிஸ்தான்-இலங்கை நட்புறவின் பலமாகும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்

(ஏ. எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *