ஏப்ரல் மாதத்திற்கான 5 எரிபொருள் கப்பல்கள் உறுதி செய்யப்பட்டது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் நேற்று உறுதி செய்யப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:
“இதற்கு முன்னர் ஏப்ரல் மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தோம். அது மார்ச் மாத இறுதி வரை நாம் உறுதிப்படுத்திய கப்பல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே கூறப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதம் முழுவதற்குமான கப்பல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அடுத்த மாத இறுதி வரை எமக்குத் தேவையான எரிபொருள் கையிருப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கும்.
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அத்துடன் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் தற்போது எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளும் இல்லை. ஒரு தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்” என்றார்.
