உள்நாடு

வரலாற்றுப் புகழ் மிகு அப்ரார் பள்ளிவாசலின் முன்னாள் தர்மகர்த்தாவும், பிரபல சமூக சேவையாளருமான முகத்தமுஷ் ஷாதுலி எம்.ஐ.எம். அஸாத் ஹாஜியார் காலமானார்

இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான வரலாற்றுப் புகழ் மிகு அப்ரார் பள்ளிவாசலின் முன்னாள் தர்மகர்த்தாவும் பிரபல சமூக சேவையாளருமான முகத்தமுஷ் ஷாதுலி எம்.ஐ.எம். அஸாத் ஹாஜியார் தனது 98வது வயதில் மார்ச் 16ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.

இலங்கையின் ஷாதுலிய்யாத் தரீக்காவின் முதலாவது கலீபத்துல் குலபா ஷேஹ் அப்துல் காதர் லெப்பையின் குடும்ப வழிவந்த முஹம்மது இப்ராஹிர் ஹாஜியார் முஹம்மது காஸிம் மரிக்கார் யெஹியா உம்மா தம்பதியின் புதல்வரான இவர், பத்துப் பிள்ளைகளுக்கு தகப்பனாவார்.

கல்வி, சமய, சமூக, ஆன்மீக வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக அளப்பரிய சேவை ஆற்றிய இவர் ஷாதுலியாத் தரீக்காவின் மூத்த இஹ்வான்களில் ஒருவராவார்.

நீண்ட காலம் மஸ்ஜிதுல் அப்ராரில் தர்மகர்த்தாவாக பதவி வகித்த அஸாத் ஹாஜியார் ஷாதுலியாத் தரீக்காவின் வளர்ச்சிக்கும் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாதின் தகப்பனாரான இவரது ஜனாஸா 16 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *