விளையாட்டு

களுத்துறை மாவட்ட சம்பியனானது தொட்டவத்தை அல் பஹ்ரியா

கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 12 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2025 களுத்துறை மாவட்ட போட்டித் தொடர் அண்மையில் களுத்துறை வெர்னன் யூ பெர்னாண்டோ கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டச் சம்பியன்ஷிப் போட்டியில், பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்ரியா மத்தியக் கல்லூரி 2-1 என்ற புள்ளியில் வெற்றிபெற்று போட்டி முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடத்தையும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இப் போட்டியில் அல் பஹ்ரியா அணி சார்பில் இளம் வீரர்களாக உமர், அப்துல் ஹாலிக், ரைஹான் அஹமட், ரகீப் அஹமட், ருஷ்தி, ஆதில், ஆதிப், யஃகூப், றிமாஸ், அஸா(z)ம், பஹாம், நபீஸ், பர்ஹத் ஆகிய விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர்.

இம் மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளராக நிஸால்தீன் மாஸ்டர் கடமையாற்றியதுடன், பொறுப்பாசிரியையாக ஸபீனா ஆசிரியை கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் அடுத்த கட்ட நகர்வாக மாகாண மட்ட போட்டிகள் எதிர்வரும் 2026. 03. 28, 29 ஆம் திகதிகளில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இத் தொடரிலும் இவ் இளம் வீரர்கள் வெற்றியடைந்து தமது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

(இப்னு அஸாத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *