அமெரிக்க தாக்குதலுக்கு இலக்கான ஈரானிய கப்பலிருந்து 84 பேரின் சடலங்கள் மீட்பு
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.
180 பேர் கொண்ட பணியாளர்களுடன், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்புப் போர்ப் பயிற்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இக்கப்பல் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ‘டொர்பிடோ’ (Torpedo) மூலம் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துச் செயற்பட்ட ஈரானிய போர்க்கப்பலொன்றை நேற்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது. அது டொர்பிடோவைப் பயன்படுத்தி மூழ்கடிக்கப்பட்டது. ஒரு அமைதியான மரணம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டொர்பிடோவைப் பயன்படுத்தி எதிரிக் கப்பலொன்று மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். நாங்கள் வெற்றிபெறவே போரிடுகிறோம். நிச்சயமாக, அழிவுகரமான முறையில், எவ்வித மன்னிப்புமின்றி அமெரிக்கா வெற்றிபெறும்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எதிரிக் கப்பலொன்றை டொர்பிடோ மூலம் மூழ்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் நடத்தப்படும் விதத்தைக் காட்டும் காணொளியொன்றையும் அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
