உள்நாடு

மனிதாபிமானம் மற்றும் இறையாண்மை அடிப்படையில் ஒன்றுபட்ட குரல் அவசியம்; ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் “காஇபான” ஜனாஸா தொழுகைக்கு ஐ.சமாதான கூட்டமைப்பு அழைப்பு

சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் வெளிப்படையாக மீறி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல் மற்றும் அதன் விளைவாக அந்நாட்டின் ஆன்மீகத் தலைவரான அயதுல்லாஹ் செய்யித் அலீ ஹுசைனி காமெனீ அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்திலும் கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது:

புனித ரமழான் மாதத்தின் ஆன்மிகப் புனிதத்தையும் மனிதாபிமானக் கோட்பாடுகளையும் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அத்துமீறிய தாக்குதல், ஒரு நாட்டின் இறையாண்மையையே அல்லாது, உலக சமாதானத்திற்கே நேரடியான சவாலாகும். எந்த காரணத்தாலும் ஒரு சுயாட்சி நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இராணுவ தலையீடு செய்வது சர்வதேச ஒழுங்கை பாதிக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக அமையும்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு இத்தாக்குதலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. சர்வதேச அரசியல் மேடைகளில் இரட்டை நிலைப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதும், பலவீனமான நாடுகள் மீதான அழுத்த அரசியல் தொடரப்படுவதும் உலகளாவிய அமைதி மற்றும் நீதிக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்பதை வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம் நாடுகள் இச்சூழலில் தங்களது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, பொதுவான மனிதாபிமான மற்றும் இறையாண்மை அடிப்படைகளில் ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற சர்வதேச இஸ்லாமிய அமைப்புகள் உடனடி அவசரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, நிலைமையை பரிசீலித்து தெளிவான மற்றும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை இவ்விவகாரத்தில் தன்னிச்சையான மற்றும் பாகுபாடற்ற விசாரணையை மேற்கொண்டு, சர்வதேச சட்ட மீறல்களுக்கு பொறுப்பான தரப்புகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகள் அனைத்தும் தங்களது அரசியல் மற்றும் பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்து, மோதல்களை விட கலந்துரையாடல் மற்றும் தூதரக முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது இன்றியமையாததாகும். மேலும் வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் உலக சமாதானத்தையும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் அபாயம் காணப்படுகிறது.

அயதுல்லாஹ் செய்யித் அலீ ஹுசைனி காமெனீ அவர்களின் மறைவு, ஈரான் நாட்டிற்கே மட்டுமல்லாது உலக முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இழப்பாகும். அவர்களின் குடும்பத்தாருக்கும், ஈரான் மக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதி, இறையாண்மை, சமாதானம் மற்றும் மனித மரியாதை ஆகியவை நிலைநிறுத்தப்பட வேண்டிய அடிப்படை உலக மதிப்புகளாகும். அவற்றை பாதுகாக்க உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும் எனவும் இதனுடன், வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் மறைந்த ஆன்மீகத் தலைவருக்காகவும், இந்த போரின் போது உயிரிழந்தவர்கள், பாடசாலை சிறுவர்கள் எல்லோருக்காகவும் “காஇபான” ஜனாஸா தொழுகை நடத்துமாறு அவர் பொதுமக்கள் மற்றும் மதகுருமார்களிடம் அழைப்பு விடுத்துள்ளார். உலக சமாதானத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு அவர் சமூகத்தினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

(கே.ஏ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *