QR முறை பயன்படுத்த அவசியமில்லை; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினமும் (02) வழமை போன்று எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், காலை 9.45 மணி வரை 29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
மேலும், நேற்றையதினம் (01) மாத்திரம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 39 இலட்சத்து 20 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மக்கள் இவ்வாறு அநாவசியமாகப் பதற்றமடைந்து தொடர்ச்சியாக வரிசைகளில் காத்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான செயலாகும் எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டி.ஜே. ராஜகருணா இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்றையதினமும் (01) பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
