ரி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 10ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் அரையிறுதியை நெருங்கியுள்ளது. நடப்பு ரி20 தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியிருந்தது.
அதற்கமைய பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாதது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலைமை சற்று மாறத் தொடங்கிய நிலையில், ரி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, உலகக் கிண்ண தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தனது வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், க்ரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியிடம் தோல்வி அடைந்தது தான் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
