விளையாட்டு

நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் சம்பியன் மகுடத்தை தனதாக்கியது சென். செபஸ்டியன் இல்லம்

கல்பிட்டி கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் நடப்பு ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் 458 புள்ளிகளைப் பெற்ற சென். செபஸ்டியன் இல்லம் சம்பியன் மகுடத்தை தனதாக்கியது.

சுமார் 320 மாணவர்களைக் கொண்ட நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் வருடத்திற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி வீதியோட்ட (மரதன்) நிகழ்வுடன் ஆரம்பித்திருந்தது. இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் சென். செபஸ்டியன் மற்றும் சென். அந்தோனிஸ் ஆகிய இரு இல்லங்கள் பலப்பரீட்சை நடாத்தின.

அத்துடன் கல்பிட்டிக் கோட்டப் பிரிவில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் கடினப்பந்து (Hardball cricket) போட்டி இடம்பெறும் ஒரே பாடசாலையாகவும் நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (11) பாடசாலை அதிபர் அமல்ராஜ் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்திருந்தது.

இவ் இறுதிநாள் நிகழ்வில் மாணவர் அணிநடை, குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள் மற்றும் இல்ல அலங்காரம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவிகளின் உடற்பயிற்சிக் கண்காட்சி நடனமும் இடம்பெற்றிருந்தது.

இந்த சிறப்புமிக்க நடப்பாண்டின் இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் மொத்தமாக 458 புள்ளிகளைப் பெற்ற சென். செபாஸ்டியன் இல்லம் நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது. விட்டுக் கொடுப்பின்றி போட்டியிட்ட சென். அந்தோணிஸ் இல்லம் 438 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதீதிகளாக புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜவாத், நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, செனெக் நிறுவன முகாமையாளர், லக்விஜய அனல்மின் நிலைய அதிகாரிகள், கல்பிட்டி கோட்ட ஆசிரிய ஆலோசகர்கள், கல்பிட்டிக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச மதகுருமார்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *